அஞ்சவத்தை – காரிய அவத்தை காரண அவத்தை விளக்கம்

அஞ்சவத்தை

காரிய அவத்தை, காரண அவத்தை விளக்கம்

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD

கனடா சைவசித்தாந்த பீடம்

www.knowingourroots.com

 

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று, அவை

சந்த்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது

அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.

 

உயிர் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்களில் ஒன்றோ அல்லது அவற்றின் கூட்டோ அல்ல. அனாதி காலமாகப் பீடித்திருக்கும் ஆணவ மலத்தின் காரணமாக உயிர் ஒன்றையும் தானாக அறியாது. அரசன் ஒருவன் எவ்வாறு அமைச்சர்களினூடாக அறிந்து அவர்களைச் செலுத்திச் செயற்படுகின்றானோ அதுபோல ஆன்மாவும் கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது.

Personality or components of personality is not the soul. Soul in conjunction with ĀNava – the eternally entangling primal spiritual fetter – cannot realize (the Truth as it is). As a king knows and acts through his ministers, so does the soul cognizes in conjunction with its faculties in going through the five states (of wake, dream, sound sleep, 4th state or turiya and beyond that – turiya-atita).

  • சிவஞானபோதம், 4ம் சூத்திரம்

 

அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா எமது உடலில் மற்றைய கருவிகளுடன் கூடி ஐந்து நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

 

காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும்

காரிய அவத்தைகள் என்பது என்ன?

அவத்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா எமது உடலில் மற்றைய கருவிகளுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. இவ்வைந்து உணர்வு நிலைகளும் காரிய அவத்தைகள் எனப்படுகின்றன. இவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்துமாம்.

 

 

இவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

 

  1. சாக்கிரம் / நனவு அல்லது விழிப்பு நிலை: புருடன் என்னும் ஆன்மாவானது அன்னமயகோசத்தில் முப்பத்தைந்து தத்துவங்களுடன் கூடி புருவ மத்தியில் நின்று தொழிற்படும் நிலை.

 

 

கர்மேந்திரியங்கள் ஐந்து

வாக்கு- குதிரைப்படை

கால்கள்- யானைப்படை

கை – தேர்ப்படை

கழிவங்கம்- காலாட் படை

சனன அங்கம்- படைத்தளபதி

ஞானேந்திரியங்கள் ஐந்து

செவி- மிலேச்சர்

மெய்- சாரணர்/ ஒற்றர்

கண்- தூதர்

வாய்- ஏவலர்

மூக்கு- புரோகிதர்

 

பரிவாரங்கள் பத்து

சத்தம்

பரிசம்

உருவம்

ரசம்

கந்தம்

வசனம்

கமனம்

தானம்

விசர்க்கம்

ஆனந்தம்

 

தச வாயுக்கள்- உறுதிச் சுற்றம்

பிராணன்

அபானன்

உதானன்

சமானன்

வியானன்

நாகன்

கூர்மன்

கிருகரன்

தேவதத்தன்

தனஞ்சயன்

 

அந்தக்கரணங்கள் நான்கு- அமைச்சர்கள்

மனம்

புத்தி

சித்தம்

அகங்காரம்

 

புருடன் – அரசன்

 

 

 

 

 

 

  1. சொப்பனம்/ கனவு: இது ஆன்மா பிராண மயகோசத்தில் இருபத்தைந்து தத்துவங்களுடன் கூடி கண்டத்தில் நின்று தொழிற்படும் நிலை.

 

இங்கு முன்னர் விழிப்பு அவத்தையில் செயற்பட்ட ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது புருவ மத்தியிலேயே ஒடுங்கி நிற்கின்றன.  புருடனாகிய ஆன்மா கண்டத்தில் நின்று ஏனைய இருபத்து நான்கு தத்துவங்களுடன் தொழிற்படுகின்றது.

 

இதுவே நாம் நனவென்று மயங்கும் கனவு என்ற அவத்தையாகும்.

 

பரிவாரங்கள் பத்து

சத்தம்

பரிசம்

உருவம்

ரசம்

கந்தம்

வசனம்

கமனம்

தானம்

விசர்க்கம்

ஆனந்தம்

 

தச வாயுக்கள்- உறுதிச் சுற்றம்

பிராணன்

அபானன்

உதானன்

சமானன்

வியானன்

நாகன்

கூர்மன்

கிருகரன்

தேவதத்தன்

தனஞ்சயன்

 

அந்தக்கரணங்கள் நான்கு – அமைச்சர்கள்

மனம்

புத்தி

சித்தம்

அகங்காரம்

புருடன் -அரசன்

 



குறிப்பு: தசவாயுக்களும் அவற்றின் செயற்பாடுகளும்:

 

பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்

பிரியாவியானன் சமானனொடு கூர்மன்

நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன்றானாகும்

நற்தேவதத்தன் ஒடுதனஞ்செயன் பத்தாகும்

இலக்கமுடன் பிரண நிலைமூலமதிற் தோன்றிஎழுந்து

சிரசளவு முட்டியிரு விழியின் கீழாய்

கலக்கமற நாசிவழியோடும் நிராறில் கடுகியெட்டு

வுட்புகுந்து கழியும் ஓர்நான்கே

உந்தியெனுந் தலத்தின்கீழ் அபானன்நின்று

உறுமி மலங்களையும் கழலச்செய்யும்;

விந்தையெழில் வியானன் தோள்தனில் நின்று

மிகக் களையுந் தவனமும் உண்டாகச் செய்யும்;

பிந்த உதானன் செயலுண்டசனந் தன்னைப்

பொருநாடி நரம்புவருவூட்டல் செய்யும்;

இந்த வுடலதனை வளர்க்குஞ் சமானன்,தானு

மியாவையு மேமிஞ்ச வொட்டா திருக்கு மன்றே;

கூர்மன் இருவிழியில் நிமைத்திடுமே; நாகன்

கொட்டாவி விக்கலெனுங் கொடுமை செய்யும்;

தீர்மை கிருகானீட்டி முடக்கி வைக்குந்;

தேவதத் தன்விழித்துமே வசனஞ் செய்யும்;

பேர்மன்னுந் தனஞ்சயன்மேற் சிரசிரண்டாய்ப்

பிளந்திடும் போதது வோடிப் போவதாகும்;

நேர்மை யறிந்திடுவை யினிநாடி பத்தின்

நிலை தெரிந்திடவிபரம் உரை செய்வோமே.

                       – அகத்தியர் இரத்தினகிரி கடம்- பாடல் 19-21-

 

  1. 3. சுழுத்தி / உறக்கம் (ஆழ்ந்த உறக்க நிலை): புருடன் என்னும் ஆன்மாவானது மனோ மய கோசத்தில் சித்தம், புருடன், பிராணன் என்ற மூன்று தத்துவங்களுடன் கூடி இருதயத் தானத்தில் நின்று செயற்படும்.

 

இங்கு முன் கனவு அவத்தையில் செயற்பட்ட கர்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது ஒடுங்கி கண்டத்தில் நிற்கும்.

 

இப்போது

சித்தம் – என்னும் தலைமை மந்திரியும்

பிராணன் – என்னும் உறுதிச் சுற்றமும்

புருடன் – என்னும் பஞ்சகஞ்சுகத்துடன் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம்) கூடிய ஆன்மாவுடன் சேர்ந்து இருதயத்தானத்தில் இயங்கும்.

 

பஞ்சகஞ்சுகங்களாவன காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து வித்தியா தத்துவங்களாம்.

 

  1. துரியம்:இங்கு முன்னர் சுழுத்தி என்னும் ஆழ்ந்த உறக்க அவத்தையில் செயற்பட்ட சித்தமும் தொழிற்படாது ஒடுங்கி இருதயத்தானத்தில் நிற்க, ஆன்மாவானது விஞ்ஞானமயகோசத்தில் புருடன், பிராணன் ஆகிய இரண்டு தத்துவங்களுடன் கூடி உந்தித்தானத்தில் நின்று தொழிற்படும் நிலை.

 

உந்தித் தானம் என்பது நாபிக்கு மேல் நாலு அங்குலத்துக்கும், நாபிக்கு கீழ் நாலு அங்குலத்துக்கும் இடைப்பட்ட  எட்டு அங்குலப் பகுதியாகும். இங்கு சித்தம் செயற்படாது இருதயத்தானத்திலேயே நிற்க, பிராணன் என்கிற உறுதிச்சுற்றம் மட்டும் புருடனுடன் சேர்ந்து உந்தித்தானத்தில் இயங்கும்.

இது சயனத்தில் அரசன் துயில் கொள்ளும் வேளையிலும் அவனது அரசு செயற்படுவது போலவாம். இங்கு உயர்ச்சி, இழிவு, சீற்றம், பொறுமை, வைதல், வாழ்த்தல், இன்பம், துன்பம் ஆகியவை இல்லை.

 

  1. துரியாதீதம்: ஆன்மாவானது ஆனந்தமய கோசத்தில் தனியே மூலாதாரத்தில் நின்று புருடன் என்ற தத்துவத்துடன் ஆணவ மறைப்பில் தொழிற்படும் நிலை.

 

இங்கு பிராணனும் உந்தித்தானத்திலே நிற்க ஆன்மா புருடன் என்ற பெயரில் பஞ்ச கஞ்சுகச் சட்டையுடன் மூலாதாரத்தில் நின்று செயற்படும்.

 

சாக்கிர முப்பத்தைந்து நுதலினிற், கனவு தன்னில்

ஆக்கிய இருபத்தைந்து களத்தனிற், சுழுனை மூன்று

நீக்கிய இதயம் தன்னில், துரியத்தில் இரண்டு நாபி,

நோக்கிய துரியா தீத நுவலின் மூலத்தில் ஒன்றே

– சிவஞான சித்தியார் பாடல் 223

 

 

மயக்கமடைந்த மூர்ச்சை நிலை, போதை நிலை, தூக்கத்தில் எழுந்து நடக்கும் நிலை, கோமா (coma) என்னும் ஆழ்ந்த மயக்க நிலை என்பனவும் இந்த அஞ்சவத்தைகளில் உள்ள இடை நிலைகளேயாம்.

 

மூர்ச்சித்தபோது பரிசேடத்தினால் அது அரை (மரணம்) ஆகின்றது.

பிரம்ம சூத்திரம் 3.2.10

 

இந்த நிலைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது சகல உயிரினங்களுக்கும் உள்ளது. அவ்வந் நிலைகளில் அவற்றின் கருவி கரணங்களின் தொழிற்பாடு அந்தந்த ஆன்மாவின் கர்ம பலனுக்கேற்ப அமையும்.

 

கால் கொடுத்து இருகைமூட்டி வாழிய

வெந்நில் தண்டுஎன இடங்கத்து இன்னியல்

பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயிறு அசைத்து

மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ

ஐம்புலச்சாளரத்து அரும்பெறல் மாடத்து

உம்பரீ மணிக்குடச் சென்னிப் பொங்கிய

கூந்தல் பதாகை நான்குநிலை தழீஇய  

ஆங்கினிது அமர்திறன் அறையின் ஆன்ற

சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம்

பிருகுடி நாப்பண் ஒருபெருங் கந்தரம்

மருமத்து ஆதி வலஞ்சுழி உந்தி

ஒருநான் கங்குலி உம்பர் வரன்முறை

செவி மெய்கண் வாய்மூக்கு எனப்பெயரிய

வாயின் மிலேச்சர் சாரணர் தூதர்

சூதமாகதர் புரோகிதர் என்ற

மேதகு புத்தீந் தியமும் தீதுஅறு  

வாக்கொடு பதம்கை பாயுரு உபத்தம்என்

இவுளி மறவரும் யானை வீரரும்

திகிரி தூண்டிய தறுகணா ளரும்

வன்கண் மள்ளரும் தந்திரத் தலைவரும்

என் கருமேந்தியத் திறளும் எஞ்சிய

ஓசை பரிசம் உருவம் இரதம்

கந்தம் உரைநடை கொடைபோக்கு இன்பம்என்

விடயப் பல்பரிசனமும் இடையாப்

பிராண வபான உதான வியான

சமான நாக கூர்ம கிருகர

தேவதத்த தனஞ்சயன் என்ற

ஈரைந்து உறுதிச் சுற்றமும் நியதி

சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும்

அந்தக் கரண அமைச்சரும் தந்தம்

முறையுளி வழாஅது துறைதோறு ஈண்டிய

சதுரங்கத்து நீதி யாகிப்

பேர் அத்தாணிச் சீர்பெறத் துன்னி

வீசுவ வீசி விரும்புவ விரும்பி

மாசில் காட்சி மன்னன் நீங்கிப்

பல் பரிவாரமும் விள்ளாச் சுற்றமும்

தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்

பலர்புகழ் அறியா அவைபுகும் அரங்கின்

நனைந்து ஆய்ந்து துணிந்து செயல்மணந்து இனிது உணர்ந்து

நனவெனக் கனவின் நன்னடை வழாஅது

உரைத்தனன் சொப்பனத் தகத்து இனிது இறந்து

மந்திரத் தலைவனும் வன்கடும் பதிபனும்

மந்திர பூமி மருங்கு போகிச்

சிந்தை மாத்திரம் கனவலின் நனவின்

தந்துரை சுழுத்தியின்றே மந்திரத்

தலைவற் தணந்து விலைவரம் பில்லாச்

சிங்கம் சுமந்த ஐம்பேர் அமளிப்

பள்ளி மண்டபத் தானும் தனாது

திகிரி யுருண்ட பெருவனப்பு ஏய்ப்ப

உறுதிச் சுற்றத்து உறுவளி எடுப்ப

ஏற்றம் அழிவு சீற்றம் ஆற்றல்

இழிச்சல் பழிச்சல் இன்ப துன்பம்

ஒழித்தனன் துரியத்து அழித்து இனிதுஅதீதத்து

ஒருவகை எங்கணுமாகி இருள் இரி

சுடர்த் தொழில் சாக்கிரம் தாங்க நான்கின்

இடத்தகை தெரிதனில் தெரியு மாறே

ஞானாமிர்தம்- பஞ்ச அவத்தை இயல் – பாடல் 16,

 

 

காரிய அவத்தைகளின் மேலதிக படிநிலைகள்:

 

  1. கீழாலவத்தை:

மேற்சொன்ன காரிய அஞ்சவத்தைகளும் நிகழும் தானங்கள் உடலில் மேலிருந்து கீழ் நோக்கி அமைவதாலும், ஆன்மாவுடன் செயற்படும் கருவிகளின் நிலை படிப்படியாகக் குறைந்துகொண்டு செல்வதாலும் இந்த ஐந்து அவத்தைகளையும் கீழாலவத்தை  என்று அழைப்பர்

 

இவ்வாறு துரியாதீத நிலையில் செயற்படும் ஆன்மா அங்கிருந்து மீண்டும் விழிப்பு நிலைக்கு மீழும்போது முன்னர் விடுபட்ட அதே ஒழுங்கில் அவ்வத் தானங்களில் விட்டுச் சென்ற அவ்வத் தத்துவங்களைக் கூட்டிக்கொண்டு மேலே மீளும். இதுவும் கீழாலவத்தை  என்பதிலேயே அடங்கும்.

 

இது அரசன் ஒருவன் அந்தப்புரத்தில் இருந்து உலாவுக்குப் புறப்படும்போது அரண்மனையின் ஒவ்வொரு நிலையில் அவனின் காவலர்களும், அமைச்சர்களும், சேவகர்களும், படை பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு செல்வதையும், மீளும்போது ஒவ்வொருவராக விடுபட்டு, இறுதியில் அவன் அந்தப்புரம் நுழையும்போது அவன் மட்டுமே தனியாக உட்செல்வதையும் ஒத்தது.

 

படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போதில்லிற்

க்டைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர்

அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோல் ஆன்மா

உடலினில் அஞ்ச வத்தை உறும் உயிர் காவ லாக

– சிவஞானசித்தியார் 222

 

அண்ணல்தன் வீதி அரசிருப்பாகும்; அணி படையோர்

நண்ணொரு நாலொன்பதாம் அவர் ஏவலும்; நண்ணும் இவ்வூர்

துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான் சுகமும் எல்லாம்

எண்ணிலி காலம் அவமே விடுத்தனன் எண்ணரிதே

– பட்டினத்தார் பாடல்

 

. …………உடலில் பல நாடிகளுள் ஹிதா என்னும் ஒரு நாடி உள்ளது. அது இருதயத்தாமரையுடன் தொடர்புடையது. இருதயத்தில் இருந்து அது உடல் முழுவதும் வியாபிக்கின்றது. மயிரிழையை ஆயிரம் கூறாக்கினால் எவ்வளவு நுண்ணியதாகுமோ அதைவிட இந்த நாடி சூட்சுமமானது. உறங்கும்போது மனிதன் இந்த நாடியில் ஒடுங்குகிறான். கனவுகூட இல்லாமல் தூங்கும்போது இந்தப் பிராண சக்தியுடன் அவன் ஐக்கியமாகிவிடுகிறான். கண் காது முதலியவற்றிலுள்ள சக்திகளெல்லாம் இதில் லயிக்கின்றன. அவன் விழித்துக்கொள்ளும்போது அச்சக்திகள் போன வழியே திரும்பி வருகின்றன.

– கௌஷீதகீ உபநிடதம் 4.19

 

இந்த விஞ்ஞான மயமான புருஷன் தூக்க நிலையில் தன் விஞ்ஞான சக்தியால் இந்திரியங்களின் சக்தியைக் கவர்ந்துகொண்டு, இருதய ஆகாசத்தில் அந்தராத்மாவிடம் ஒடுங்குகிறான். அவற்றை (இந்திரிய சக்திகளை) எப்போது உட்கவர்கின்றானோ அப்போதே இப் புருஷன் தூங்குகிறான் என்பது பிரசித்தம். அப்போது கிராணேந்திரியும் (முகரும் சக்தி) உட்கவரப்படுகின்றது; வாக்கு உட்கவரப்படுகின்றது; கண் உட்கவரப்படுகின்றது; மனதும் உட்கவரப்படுகின்றது.

– பிருகதாரண்யக உபநிடதம் 2.1.19

 

ஆழ்ந்த, கனவுகளற்ற உறக்க நிலை ஆத்மாவிலும் நாடிகளிலும் உண்டாவதாக சுருதி கூறுகின்றது.

– பிரம்ம சூத்திரம் 3.2.7

 

 

ஆன்மாவின் பிறவிகளுக்கு முந்தைய காரண அவத்தைகள் மூன்றில் அநாதி கேவல நிலையானது இந்தக் காரிய அவத்தையின் கீழாலவத்தையினுடைய துரியாதீத அவத்தைக்கு ஒப்பானது. இதனால்தான்  கீழாலவத்தையைக் காரிய கேவலம் என்றும், சகலத்திற் கேவலம் என்றும், அப்பிரதிபா சாக்கிரம் என்றும், கேவல அஞ்சவத்தை என்றும் அழைப்பர். இதன் ஐந்து அவத்தைகளையும்  கேவல சாக்கிரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம், கேவல துரியாதீதம் என்றும் அழைப்பர். பிரதிபா என்றால் விளக்கமான அறிவு. அது இல்லா நிலை அப்பிரதிபா.

 

  1. மத்தியாலவத்தை:

இதைவிட சாக்கிர அவத்தை நிகழும் புருவ மத்தியாகிய இலாடத்தானத்தில் ஆன்மா நிற்கும் நிலையிலேயே மேற்கூறிய ஐந்து அவத்தைகளும் நிகழும் நிலையும் உண்டு. இவற்றை மத்தியாலவத்தை என்று கூறுவர்.

 

அறிதரு முதல் அவத்தை அடைதரும் இடத்தே, ஐந்தும்

செறிதரும், கரணம் தன்னில் செயல்தொறும் கண்டு கொள் நீ

-சிவஞானசித்தியார் 224

 

இங்கு ஆன்மா விழிப்பு நிலையில் நின்றுகொண்டே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து நிலைகளையும் அனுபவிக்கின்றது. மத்தியாலாலவத்தையில் நிகழும் ஐந்து அவத்தை நிலைகளையும் இதனால் சகல சாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம் என்றும் அழைப்பர்.

 

இங்கு ஐந்து அவத்தைகளும் தனித்தனியே நிகழ்ந்தாலும் அடுத்தடுத்து மிக விரைவாக நிகழ்வதால் அவற்றைத் தனித்தனியே பிரித்தறிந்து கொள்ள முடியாதுள்ளது. இது ஒரு காற்றாடியின் ஐந்து சிறகுகளும் மிக விரைவாகச் சுழலும்போது அவற்றைத் தனிதனியாக இனங்காண முடியாமல் இருப்பது போலவாம்.

 

ஆன்மாவின் காரண அவத்தையாகிய சகல அவத்தையானது இந்தக் காரிய அவத்தையாகிய மத்தியாலவத்தையின் சாக்கிர நிலைக்கு ஒப்பானது. இதனால் மத்தியாலவத்தையைச் சகலத்தில் சகலம் என்றும், காரிய சகலம் என்றும், சப்பிரதிபா சாக்கிரம் என்றும், சகல அஞ்சவத்தை என்றும், அழைப்பர்.    

 

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்

இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் – இலாடத்தே

அவ்வவ இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே

அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு.

– சிவஞானபோத வெண்பா 29

 

 

  1. மேலாலவத்தை:

 

  • மேலாலவத்தையில் யோகாவத்தை:

இதைவிட குருவருள் பெற்றவர்கள் ஞானநிட்டை எய்தாவிடத்து குறிப்புப்பாவனை செய்து சிவனுடைய அருள் வடிவத்தில் தமது அறிவை நிறுத்தி உபாய நிட்டை என்னும் சமாதி கூடுவர்.

 

”பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே

குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட”

– சிவஞான சித்தியார் 225

 

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ(து) எக்காலம்?   

-பத்திரகிரியார் பாடல்

பிரதியாகாரம், தியானம் முதலான யோக சாதனங்களின் பயிற்சியினால் எய்துகின்ற இந்த யோகாவத்தையின் ஐந்து அவத்தை நிலைகளும், அவை நிகழும் தானங்களும் வருமாறு;

 

சாக்கிரம் – இருதயத் தானம் – இங்கு சிவ தத்துவம், சத்தி தத்துவம், சாதாக்கிய தத்துவம், மகேசுரம், சுத்த வித்தை ஆகிய ஐந்து கருவிகளும் தொழிற்படும்.

சொப்பனம் – கண்டம் – இங்கு சிவ தத்துவம், சத்தி தத்துவம், சாதாக்கிய தத்துவம், மகேசுரம் ஆகிய நான்கு கருவிகளும் தொழிற்படும்.

சுழுத்தி – உள் நா – இங்கு சிவ தத்துவம், சத்தி தத்துவம், சாதாக்கிய தத்துவம் ஆகிய மூன்று கருவிகளும் தொழிற்படும்.

துரியம் – புருவ நடு – இங்கு சிவ தத்துவம், சத்தி தத்துவம் ஆகிய இரண்டு கருவிகளுடன் தொழிற்படும்.

துரியாதீதம் – பிரமரந்திரம் – இங்கு சிவ தத்துவம் என்ற கருவி ஒன்றுடனேயே ஆன்மா தொழிற்படுகின்றது. பிரமரந்திரத்தில் வாய்க்கும் துரியாதீத அவஸ்தையே உபாய நிட்டை என்னும் சமாதி.

 

இவ்வாறு இருதயத்தானத்தில் இருந்து மேல் நோக்கி நிகழ்வதால் இந்த ஐந்து அனுபவ நிலைகளும் மேலாலவத்தை என்றழைக்கப்படுகின்றன.

 

பிரமரந்திரத்தில் வாய்க்கும் துரியாதீத அவஸ்தையே உபாய நிட்டை என்னும் சமாதி. இது காரண அவத்தை நிலைகள் மூன்றில் ஒன்றாகிய  சுத்த அவத்தை என்னும் மலங்களுடன் கட்டறுத்த நின்மல முத்திநிலையாகிய உண்மை நிட்டை நிலைக்கு ஒப்பானது.  சமாதி நிலையில் சில நிமிடங்களோ சில மணித்தியாலங்களோ கழித்தபின் ஆன்மா மீண்டும் இருதயத் தானத்துக்கு வந்து சாக்கிர நிலைக்கு மீளும். உண்மை நிட்டை கூடும் காலம் வரை இது நிகழும்.

 

  • மேலாலவத்தையில் ஞான அவத்தை என்னும் முத்திநிலை:

 

குருவருளாலும், திருவருளாலும் இருவினையொப்பு நிலை வர, இவ்வளவு காலமும் ஆன்மாவை இறையுடன் தொடர்பு படுத்திய திரோதான சக்தி என்னும் மறைப்புச்சக்தி இப்பொழுது அருட்சக்தியாகப் பரிணமிக்கும் சத்திநிபாதம் நிகழச் சிவஞான அநுபவம் கை வரப்பெற்று உண்மை நிட்டையில் திளைப்பர். இது காரண சுத்த அவத்தையும், காரிய மேலாலவத்தையும் கூடிய நிலையாகும்.

 

மலங்களின் கட்டறுத்த உண்மை நிட்டை நிலையில் கருவிகளின் தொடர்பு ஆன்மாவுக்கு இல்லை. இந்நிலையில் ஆன்மாவானது பஞ்ச மலங்களும் நீங்கி வியாபக அறிவு எய்தும் நிலையாம். இங்கும் அஞ்சவத்தைகளினூடாக ஆன்மா இறையை அறிந்து அனுபவித்துத் திளைக்கும். இந்த மலக்கடறுத்த நிலையில் நிகழும் இந்த அஞ்சவத்தைகளும் ஞானாவத்தை என்றும் சுத்த அஞ்சவத்தை, நின்மல அவத்தை என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு நிகழும் அஞ்சவத்தைகளையும் நின்மல சாக்கிரம், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் எனக் கூறுவர்.

 

இவற்றின் விளக்கம் வருமாறு:

 

நின்மல சாக்கிரம் – அருளாலே தன்னை அறிவது

நின்மல சொப்பனம் – அருளினாலே தன்னை அறிந்தபின் தனக்கொரு சேட்டையுமின்றி அந்த அருளே தனக்கு ஆதாரமாய் அவ்வருளிலே தான் அசைவற நின்று அவ்வருளைத் தரிசிப்பது

நின்மல சுழுத்தி – ஆன்மாவின் இச்சா, ஞானக் கிரியைகள் இன்றி அவ்வருளே தானாகி எதிரீடு சிறுதும் இன்றி இருக்கும் அவதர நிலை.

நின்மல துரியம் – மல வாசனை சிறிதும் இன்றி ஆனந்தவொளி தோன்று நிலை

நின்மல துரியாதீதம் – ஆனந்த அநுபவம் பெற்ற ஆன்மா அந்த ஆனந்த அனுபவத்தை அறிந்த தானுமின்றி ஆனந்தமாய் நின்ற முதலும் இன்றி அந்த ஆனந்தமே தானாய் அதீதப்பட்ட நிலை

 

 

மிக்கது ஒரு பக்குவத்தில் மிகு சத்தி நிபாதம் 

மேவுதலும், ஞானம் விளைந்து, ஓர் குருவின் அருளால் 

புக்கு அனுட்டித்தே, நிட்டை புரிந்து ளோர்கள் 

பூதலத்தில் புகழ் சீவன் முத்தர் ஆகித், 

தக்க பிரிய-அப்பிரியம் இன்றி, ஓட்டில் 

தபனியத்தில் சமபுத்தி பண்ணி, சங்கரனோடு 

ஒக்க உறைந்து, இவர் அவனை அவன் இவரை விடாதே, 

உடந்தையாய்ச் சிவன் தோற்றம் ஒன்றுமே காண்பர்.

-சிவஞானசித்தியார் 281

 

அறியாமை அறிவு அகற்றி, அறிவி னுள்ளே

அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து,

குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்

கூடாதே வாடாதே குழைந்து இருப்பை யாயில்,

பிறியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்

பிரபஞ்ச பேத ம் எல்லாம் தானாய்த் தோன்றி,

நெறியாலே இவை எல்லாம் அல்லவாகி

நின்று என்றும் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே.

– சிவஞானசித்தியார் 282

 

 

சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள், உலகிற் 

சருவ சங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள்; இவர்கள் 

பாக்கியத்தைப் பகர்வது என்?  இம்மையிலே உயிரின் 

பற்று அறுத்துப் பரத்தை அடை பராவுசிவர் அன்றோ? 

ஆக்குமுடி கவித்து, அரசாண்டு, அவர்கள் அரிவையரோடு 

அனுபவித்து அங்கு இருந்திடினும், அகப்பற்று அற்று இருப்பர்; 

நோக்கி இது புரியாதோர் புறப்பற்று அற்றாலும் 

நுழைவர் பிறப்பினில், வினைகள் நுங்கி டாவே.

– சிவஞானசித்தியார் 287

ஞாலமதின் ஞான நிட்டை உடையோருக்கு 

நன்மையொடு தீமையிலை, நாடுவது ஒன்றில்லை, 

சீலமிலை, தவமில்லை, விரதமொடு ஆச்சிரமச் 

செயலில்லை, தியானமிலை, சித்த மலம் இல்லை, 

கோலமிலை, புலன் இல்லை, கரணம் இல்லை, 

குணம் இல்லை, குறி இல்லை, குலமும் இல்லை, 

பாலருடன் உன்மத்தர் பிசாசர் குண மருவிப் 

பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்.

சிவஞானசித்தியார் 284

 

காரண அவத்தைகள்:

 

இவ்வாறே ஆன்மாவுக்கு காரிய அவத்தைகளுக்கு மூலமாக மூன்று நிலைகள் உள்ளன. இவை காரண அவத்தைகள் எனப்படுகின்றன. இவை சகலம் என்னும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் உள்ள நிலையும், கேவலம் என்னும் பிறவிச்சுழலில் வருவதற்கு முன்னுள்ள நிலையும், சுத்தம் என்னும் மலங்களின் பிடியில் இருந்து விடுபட்ட முத்தி நிலையுமாம்.

 

 

பிறவிக்கடலுக்கு வருமுன்னர் கருவி கரணங்கள் இல்லாமல் ஆணவ இருளில் ஆன்மாக்கள் தனியே அழுந்தியிருக்கும் நிலையைக் கேவல நிலை என்பர். கேவலம் என்றால் தனிமை என்பது பொருள். இது கீழாலவத்தையின் துரியாதீத நிலைக்கு ஒப்பான நிலையாகும்.

 

“காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற

கண்ணிலாக் குழவியைப்போற் கட்டுண் டிருந்த

எமை”

-தாயுமானார் பாடல்

 

“அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்

குறியொன் றிலாநித்தன் கூடான் கலாதி

செறியுஞ் செயலிலான் றினங்கற்ற வல்லோன்

கிறியன் மலவியாபி கேவலந் தானே”

– திருமந்திரம் 2247

 

பிறப்பெடுத்து பிறவிச்சுழலில் வருகின்ற நாம் கருவி கரணங்களுடன் கூடிய சகல நிலையில் உள்ள ஆன்மாக்களாம். இந்நிலை மத்தியாலவத்தையின் சாக்கிர நிலைக்கு ஒப்பானதாகும்.

 

“உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று

மருவுற்றுப் பூத மனாதியான் மன்னி

வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்

கருவுற் றிடுஞ்சீவன் காணுஞ் சகலத்தே”

– திருமந்திரம் 2261