ஆலய தத்துவ விளக்கம் சிவஸ்ரீ,குமாரசாமிக்குருக்கள், அச்சுவேலி

ஆலய தத்துவ விளக்கம்

சிவஸ்ரீ, குமாரசாமிக்குருக்கள், அச்சுவேலி

தொகுப்பும் குறிப்பும் – குருவடி பணிந்து

வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD

சைவ சித்தாந்த பீடம், கனடா

www.knowingourroots.com

 

பிரம விட்டுணுக்கள், இந்திராதி தேவர்கள் யாவரும் அசுத்தமாயா புவனங்களில் இருப்பவர்களும், சுத்த வித்தியா தத்துவ வாசிகளும் என இருதிறப்படுவர்.

(குறிப்பு: நமது உடல், கருவி, கரணங்கள், அனுபவப் பொருட்கள் போல மாயையால் ஆனதே இவ்வுலகமும். மாயையானது அசுத்த மாயை, சுத்த மாயை என இரு வகையாக உள்ளது. அசுத்த மாயையின் ஒரு பகுதி பிரகிருதி மாயை ஆகும். மாயையில் இருந்து தோன்றும் உலகங்களும் சுத்த மாயா உலகங்கள், அசுத்த மாயா உலகங்கள் என இரு வகைப்படும். எமது பிரகிருதி மாயா உலகங்களையும் சேர்த்து மூவுலங்களாகக் கூறுவதும் உண்டு.)

சுத்த வித்தியா தத்துவத்தில், நந்தி முதலிய கணநாதர்கள் எண்மர்களும், பிரம விட்டுணுக்களும், இந்திராதி லோகபாலகர்களும் இருப்பார்கள். சுத்த வித்தை முதலிய தத்துவங்களில் இருப்பவர்களுடைய சரீரம் வைந்தவம் ஆகையாலும், மலபரிபாக முற்றுப் பரசிவனருளால் பதம் பெற்றவர் ஆதலானும், பிறப்பு இறப்புகள் நீங்கி ஆண்டு நின்ற படியே சிவ தரிசனத்தால் ஆனந்த விளக்கத்தை அடைபவர் ஆகலானும், இவர்களே சிவபூசை யாகதி கிரியைகளில் பூசிக்கப்படும் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள் என்பது சிவாகம நூல் துணிபாகும்.

(குறிப்பு: சுத்த மாயா உலகங்களில் உள்ளவர்களின் தனு, கரண, புவன, போகங்கள் யாவும் விந்து தத்துவத்தால் ஆனவை. விந்து தத்துவத்தினால் ஆனதால் அவர்களது சரீரம் வைந்தவ சரீரம் எனப்படும். இதேபோல அசுத்த மாயா உலகங்களில் உள்ளவர்களின் சரீரம் கலா தத்துவத்தினால் ஆனதால் கலாதி சரீரம் என்ப்படுகின்றது.)

அசுத்த மாயாதத்துவ வாசிகளாகிய பிரமவிட்டுணு இந்திரன் முதலிய தேவர்களது சரீரம் பிரகிருதி சம்பந்த மாகலானும், முன் பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமையாலும், அசுத்ததத்துவம் முப்பத்தொன்றையும் மனசால் கடந்து யாகசாலையை அடைந்து பூசித்து வணங்குவதினாலும், அசுத்த புவன வாசிகளான பிரம விட்டுணு முதலியோர் சுத்த வித்தியா தத்துவமயமான யாகசாலையில் பூசிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்.

1 thoughts on “ஆலய தத்துவ விளக்கம் சிவஸ்ரீ,குமாரசாமிக்குருக்கள், அச்சுவேலி

Comments are closed.